முருகன் வள்ளி , நீலன் மைலா காதல் கதைகள் வரும் வேள்பாரி பகுதிகள் என் நெஞ்சுக்கு அருகில் இருப்பவை. அதை படித்தது முதல் அது போன்ற ஒரு கதை எழுத என் உள்ளூரியது. இன்று அதுவே ஒரு சிறிய ஊற்றாக மாறி எழுத்து வடிவு பெற்றுள்ளது.
ஒரு கார்த்திகை நாளன்று வீட்டின் திண்ணையில் அமர்ந்து மாலை பொழுதில் தனிமையை வெல்ல மாறன் முயன்று கொண்டிருந்தான். குளிர் காற்று வீச உமையாள் மாறனின் குடிசை வந்தடைந்தாள். இருவரும் அவனது குடிசையில் அகம் மகிழ்ந்து பேசி கொண்டிருந்தனர்.
காலத்தை விழுங்கும் ஆற்றல் நம் மனதுக்கு அணுக்கம் நிறைத்தவரிடம் கதைக்கும் நேரங்களில் நம்மால் உணர முடியும். பசியறியா, பொழுதறியா அவர்களின் உரையாடல் நீட்சி கொண்டே இருந்தது.
எதிர்பாரா வண்ணம் மின்சாரம் தடையுற்று திசை எல்லாம் இருளில் மூழ்கி கிடந்தது. இருளின் கோரம் உமையாளின் ஆழ் மனதில் இறங்கி கொண்டிருக்கும் வேளையில், தெரு நாய்களின் ஊளை சத்தம் உமையாள் நெஞ்சை நடுங்க செய்தது .காதலை முந்தி கொண்டு பயம் உமையாளை முன் நகர்த்தியது. அனிச்சையாக அவளது கரங்கள் மாறனின் கைகளை பற்றியது.
அவளது உடல் சூட்டை அவனது குளிர்ந்த தேகம் கடப்பதை மாறன் உணர தொடங்கினான். எல்லா குளிருக்கும் தான் தேடும் சூடு இவள் தானென்று மனம் துள்ள தொடங்கியது. அவளது கைகளை மெல்ல பற்றி ஆறுதல் கூறி பின் மெழுகுவர்த்தி ஏற்ற தீக்குச்சியை பற்றினான்.
திரியில் நெருப்பு பற்றியவுடன் உருக தொடங்கியது மெழுகல்ல மாறனின் நெஞ்சம். ஒற்றை தீக்குச்சி பெரும் காட்டை விழுங்க வல்லது என்பதை மாறன் அப்பொழுது தான் உணர்ந்தான்.வீசும் ஒளியில் உமையாளின் பொன்தேகம் மேலும் மிளிர செய்தது. இந்த இருள் மாறனுக்கு புது பாதையை காட்டி கொண்டிருந்தது. உமையாளை முதல் முதல் பார்த்த கணம் மாறனின் நெஞ்சினுள் பரவதொடங்கியது.
அன்று, வழக்கம் போல் ஆற்றங்கரையோரம் உள்ள ஆலமர விழுதுகளை பிடித்து ஊஞ்சல் போல் தொங்கி கொண்டிருந்தான் மாறன். ஆற்றுக்குள்ளிருந்து ஒரு பதுமை வெளி வர கண்டு உறைந்து நின்றது மாறனின் கண்கள். ஆற்று நீர் ஒளி மின்னுவது இவளது தேகம் உதிர்க்கும் ஒளியினாலா கதிரவன் ஒளியினாலா என்ற வியப்புகள் மாறனின் உள்ளத்தே ஊடுருவி கொண்டிருந்தது.
வழிந்தோடும் கூந்தலை கண்டு ஆற்றை தன் கூந்தலோடு கடத்தி வந்தாலா என்று கேள்வி இடைவிடாது மாறனின் நெஞ்சை தட்டியது. உயர பறக்கும் பருந்து போல மாறனின் பார்வை அவளின் மீன் கண்களை கவ்வ முயன்று கொண்டு இருந்தது. சிறு வயதிலிருந்து விழுதுகளை இறுக பிடித்து விளையாடிய மாறனின் கைகள் அன்று நழுவ தொடங்கியது. காதலேனும் ஆற்றில் முழுமுற்றாக மாறன் மூழ்கினான்.
ஆற்றியில் இருந்து அவளை பின்தொடர்ந்து சென்ற மாறன், கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை இடைமறித்து நின்றான்.
மனதின் இடையூறுகளை கணநேரத்தில் வென்று வாய் திறந்து அவளிடம் பேச ஆயத்தமானான். உங்களை இந்த ஊரில் பார்த்ததில்லையே! நீங்கள் யார், உங்கள் பெயர், தனியாக எப்படி இந்த ஆற்றங்கரைக்கு என்று தன் உள்ள தடுமாற்றலை கேள்விளாக அடுக்கி கொண்டு போனான்.
அவளோ நிதானமாக தன் கூரிய கண்களால் மாறனை கண்களின் வழியே ஊடுருவ பேச தொடங்கினாள். ஊர் காவல் வீரருக்கு , காட்டு விலங்குகள் பற்றி மட்டும் அறிந்தவராக இல்லாமல் ஊரில் உள்ளவர்களை பற்றியும் கொஞ்சமேனும் தெரிந்து வைத்திருத்தல் மிக அவசியமான ஒன்று என்று மென்மையாக மொழிந்தாள்.
காட்டு விலங்குகள் ஊருக்குள் புகாதவாறு இராக்காவல் புரியும் ஊர் காவல் படையில் தன்னார்வ உணர்வோடு தொண்டு செய்பவன் மாறன்.
தான் சற்றும் எதிர்பாராததாக இருந்தது அவளின் பதில். தன்னை பற்றி அவளின் கூற்று மாறனை வியப்பின் பேராழத்தில் தள்ளியது. அவளை கண்டு சருகிய மனம் அவளின் மொழியை கேட்டு மேலும் சரிந்தது. பேச வார்த்தைகளை தேடி எண்ணங்கள் அலைந்தோடின. கிடைத்த வார்த்தைகளும் தொண்டை குழியில் சிக்கி வெளி வர மறுத்தன.
விலங்குகள் ஏற்படுத்தும் காயங்களுக்கு மருத்துவச்சி வீட்டுக்கு வரும் தாங்கள் அங்கு நோட்டம் விட்டிருந்தால் இத்தனை கேள்விகளும் தடுமாற்றங்களும் வந்திருக்காது அல்லவா என்று புன்முறுவல் பூத்தாள்.
திகைப்பில் இருந்து மீளாத மாறன் சிந்தனையை மருத்துவச்சி வீட்டினுள் ஒருமை படுத்தினான். மாறன் நினைவுக்கு வந்தது கொலுசுகள் ஏந்தி நடக்கும் வழுவழுப்பான கால்கள் மட்டும் தான்.
மாறனின் எண்ண ஓட்டங்களை தகர்க்கும் விதமாக அவள் முணுமுணுக்க ஆரம்பித்தாள். மண்ணையே உங்கள் கண்கள் பார்த்து கொண்டிருந்தால் என்று வானை அடையாளம் கொள்ள போகிறீர்கள் என்று அவள் வினவினாள்.
அந்த கால்களுக்கு உரிமை கொண்டவள் இவளென்று புரிந்து கொண்டான். தான் அவளின் கால்களை நோக்கியதை அவளும் அனுமதித்து இருக்கிறாள் என்பதை உணர்ந்த கணம் சிறகுகள் இன்றி காற்றில் மிதக்க எத்தனித்தான்.
அவளின் மஞ்சள் பூசிய முகத்தில் விரிந்த நுதலில் இரு புருவத்திற்கிடையே இட்ட சிவந்த பொட்டு காலை கதிரவனை நினைவூட்ட, தண்ணீர் வடிய கொண்டிருக்கும் கூந்தல் மாரியை கொண்ட கருமேகத்தை ஒத்து இருந்த வானின் அடையாளங்களை கண்டு மயங்குநிலை கொண்டான்.
நீ காவல் படையில் பணிபுரிய தகுதியற்றவன் என்று மூர்க்கத்தோடு கூறினாள். மாறனை மண்டையில் அரைந்ததாக இருந்தது அவளின் கூற்று. மயங்கு நிலையில் இருந்து மீண்டு நிலைக்கொள்ள தடுமாறினான்.
ஏன் என்று வினவும் முன்னே, அவளே தன் நியாயத்தை சூல் உரைத்தால். காவல் வீரனான உனக்கு என் கண்கள் உன் சரீரத்தை ஊடுருவ முயன்றதை உள்ளுணர்வால் ஒரு சந்தர்ப்பத்திலும் உன்னால் உணரமுடியவில்லை. நறுமணம் ஏந்திய என் தேகங்கள் கடக்கும் போது அது உணராது உன் நுகர்வும், நான் குறிப்பு ஒலி எழுப்பிய நேரங்களிலும், உமையாள் என்று என் அன்னை கூப்பிடும் போதும் உன் செவிகள் மறுத்து இருந்தது தான் காரணிகள் என்று போட்டு உடைத்து சன்னமாக புன்னகைத்தாள். இப்பொழுது சிறகின்றி முழுவதுமாக காற்றில் பறக்க ஆரம்பித்தான்.
அன்று நழுவிய கைகள் இன்று உமையாளின் கைகளை இறுக பற்றியது. அன்று நீரின் குளுமையும் இன்று நெருப்பின் கதகதப்பும் என அவளினுள் இருக்கும் மாய வித்தையை மாறன் ரசித்து சஞ்சரித்து கொண்டிருந்தான்.
அன்று கண்ட அவளின் தேக ஒளி சிதறல் இன்றும் காண நேரும் போது மாறனின் மனமும் சிதறக் கண்டது. மாறன் கைகள் பற்றிய கனமே உமையாள் தன்னை இழக்க ஆரம்பித்தாள். இருளின் பிடியில் இரவு இருப்பதை போல ஒருவரின் பிடியில் மற்றொவர் இருந்து யாமத்தை கடந்து சென்றனர். இரு நிழல்கள் ஒரு நிழலாகி இரவு முழுவதும் இருவரின் தேகங்களும் ஈரம் கசியவிட்டு கொண்டேயிருந்தது. குடிசைக்கு வெளியே வானும் இரவெல்லாம் பனியை கசியவிட்டு கொண்டே இருந்தது...