Total Pageviews

Tuesday, June 25, 2019

வேள்பாரி அரசியல்

திடீரென அடைமழை பொழிய தொடங்கியது, நண்பர்கள் நான்கு பேரும் தங்கள் வண்டியை விட்டொரு தேனீர் கடையோரம் ஒதிங்கினர்.

ஆணி மாசத்திலிப்படி மழை வந்து பார்த்ததில்லையே , அடிக்கின்ற வெயிலுக்கு ரொம்ப தேவையான மழை
தானென்று புன்னகைத்து பேசினார் மகேஷ்.

இயற்கை பற்றி நாம் புரிந்து வைத்திருப்பது கொஞ்சம் தான்.வேள்பாரி பற்றி படித்துவருகிறேன் , இயற்கையின் பல ஆச்சரியமூட்டும் விடயங்களும் மனித குலங்கள் அவற்றை காக்க துடிக்கும் வீரத்தையும் மிக அருமையான புனைவு வழியாக இந்த தலைமுறைக்கு விட்டு  சென்றுள்ள அந்த எழுத்தாளரை நாம் பாராட்டியே ஆக வேண்டும் என்று தன் கருத்துகளை முன்வைத்து தொடங்கினார் அன்புமணி.

வேள்பாரி என்றால் யார் , சுதந்திர போராட்ட தியாகியா என்று தனது ஆர்வத்தை அந்த கேள்வியிலே தெரியுமாறு கேட்டார் சாமிகண்ணு.

மகேஷ் முந்திக்கொண்டு "வேள்பாரி தெரியாதா!! நாம் சிறு வயதில் படித்திருப்போமே அந்த பாரி" என்றார்.

அன்புமணி தன் கைபேசியில் உள்ள அந்த புத்தகத்தின் புகைப்படத்தை நண்பர்களுக்கு காண்பித்தார்.

"வேள்பாரி" க்கு மேல் நோக்கு "ல்" தானே வரவேண்டும் ,இது என்ன புது மாதிரியாக கீழ் நோக்கு "ள்" பயன்படுத்தி உள்ளனர் என்று ஆர்வம் குறையாமல் சாமிகண்ணு வினவினார்.

அந்த சிற்றரசன் வேளிர் குலத்தை சேர்ந்தவன் ஆகையால் அவனது பெயரவனது குலத்தை கொண்டு இருக்கிறது. வேள்பாரின் கொடையின் ஈரம் ஒரு துளியேனும் இன்று இருப்பவர்களுக்கு இருந்திருந்தால் நம் தேசம் இதனை துயரங்களை சந்தித்திருக்காது என்று மேல்கூறினார் அன்புமணி.முல்லைக்கு தேர் ஈந்த அவன் வள்ளல் தன்மை கண்டு நான் உருகி விட்டேனென்று அடுக்கி கொண்டு சென்றார்.

சட்டென குறுக்கிட்ட ஸ்ரீனி முல்லைக்கு தேர் ஈவதுதெல்லாம் நம்பும் படியாக இல்லை. மேலும் நீங்களே இது ஒரு புனைவு கதை என்னும் போது இதை பெரிது படுத்திபேசி உணர்ச்சிவசப்படுவது உங்கள் பலவீனத்தையே காட்டுகிறது என்று எடுத்த கணமே இடியென முழங்கினார்.

சற்றும் எதிர்பாராத விதமாக ஸ்ரீனி குறுக்கிட்டது அன்புமணியை திகைக்க வைத்தது. ஏன் மறுக்கீறீர்கள் என்று வினவினார்.

ஒரு கொடிக்கு தேர் தரும் செயல் மிகவும் மிகைப்படுத்தியது போல இருக்கிறது, புலவர்கள் பரிசு பெற எதுவேண்டுமென்றாலும் பாடுவார்கள் . அதை எல்லாவற்றையும் நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள  கூடாது என்று ஸ்ரீனி பதிலுரைத்தார் .

ஆமாம் கொஞ்சம் மிகை படுத்தியது போலவே எனக்கும் தோணுகின்றது என்று மற்ற இருவரும் ஆமோதித்தனர்.

நீங்கள் இயற்கையை  புறக்கணித்து வாழ்வதே உங்கள் எண்ணங்களுக்கான காரணமாகும் என்று அன்புமணி கணநேரத்தில் எதிர்த்தார்.

ஒரு கொடியின் வலியை உணர அதற்கு ஒரு கழி நட்டு உதவி செய்திருக்கலாமே அதை விடுத்து ஏன் ஒரு தேர் என்பதே எங்களின் பகுத்தறிவி என்று ஸ்ரீனி  வாதிட்டார் .

அன்புமணி சற்றும் தயங்காமல் உரத்த பேச ஆரம்பித்தார் , நீங்கள் உங்களின் சிந்தனை  அளவுகோட்டின் வழியே ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அணுக முயலுகிறீர்கள் . உங்களை போன்ற மிதவாதிகள் என்றும் ஒரு இயற்கை நேசிப்பாளனின் அறிவை அறிய முடியாது .

ஸ்ரீனி நிதானம் தவறாமல் சொற்களை உதித்தார்  மிதவாதி எண்ணமல்ல , நடைமுறை சாத்தியம் பற்றி நான் வாதிக்கிறேன்

கோபமுண்ட அன்புமணி "இது நடந்துமுடிந்த சரித்திரம்  . அதை ஏற்க உங்கள் கண்கள் மறுக்கிறது " என்றார் .

தேநீரில் இருந்து வரும் அனலை விட இவர்கள் வார்த்தைகளின் இருந்து வரும் அனல் மற்ற இருவரின் உடலை சூடேறியது.

கொஞ்சம் எள்ளல் சிரிப்புடன் தன் பேச்சு திறனை ஆரம்பித்தார் ஸ்ரீனி . "சரித்திரம் !! அது எழுத்தாளின் சிந்தனை வழியே நம்மை கடத்தி செல்லவல்லது . நிறம் ,உருவம் , அடர்த்தி எல்லாம் படைப்பாளியின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கம் செய்யப்பட்டது. ஒரு சார்பாகவே அது படர்ந்து போகும் .

தலையை வேகமாக நிராகரிப்பு தோரணையில் அசைத்தார் அன்புமணி . "சிறுவயதில் பாடப்புத்தகத்தில் இதே கதை வரும் பொது ஏற்றுக்கொண்ட மனநிலை எப்பொழுது ஏற்க மறுக்க காரணம் , நாம் நம் வரலாற்றையும் தொன்மங்களையும் கடத்த தவிறிவிட்டோம் என்று என்னால் உணரமுடிகிறது "

வரலாறு மற்றும் தொன்மங்கள் போன்ற பழமை பேசி எத்தனை நாள் கழிக்க போகிறீர்கள் என்று கடுமையாக கேள்வி எழுப்பினார் ஸ்ரீனி .

ஆலமரம் செழித்து வளர்ந்தாலும் அது விதையில் இருந்துதான் வந்தது .அந்த விதையை பற்றி பேசுவதும் அதை காப்பதுமே பழமை என்பது உங்களுக்கு நினைவூட்டிக்கிறேன் என்றார் அன்புமணி.

இன்றைய நவீன அறிவியல் உலகத்தில் விதையை செயற்கையாக உற்பத்தி செய்யும் திறன் வந்துள்ளது ,ஆகையால் நீங்கள் கூறும் பழமை , கதைகள் எல்லாம் சிறந்த புனைவுகளே .நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று என்று கூற முயன்றார் ஸ்ரீனி.

மிதவாதிகளின் பிரச்சைனையே இது தான் என்று தன் உணர்வுகளை அன்புமணி மறுபடியும் கூறினார்.

மிதவாதிகளாய் இருப்பதில் தவறேதும் இல்லையே .எல்லா சேதிகளையும் நடுநிலையோடு எங்களால் மட்டுமே பார்க்க இயலும் .  வள்ளுவர் கூட நடுவுநிலை பற்றி பாடியுள்ளாரே அதை அறியாதவர் இல்லையே நீங்கள் என்று கேள்வி எழுப்பி மேலும் அன்புமணியை ஆவேசமாகினார்.

மூக்கு விடைக்க பேச ஆயுதமானர் அன்புமணி.   உண்மை பொய்மை , வெற்றி  தோல்வி  , வலது இடது, என்று இயற்கையின் விதியில் எல்லாம் இரு கூறுகளாகவே அமைந்துள்ளது . நீங்கள் உங்களுக்கு என்று ஒரு பக்கத்தையோ நிலைப்பாட்டையோ  அடையாளத்தையோ ஏற்க மறுக்கிறீர்கள். வலது இடது சாரிகள் என அனைவரையும் குறை கூறுவது தவிர உங்களுக்கு ஒரு தனி தன்மை இல்லை.கோழைகளின் அடையாளம் தான் இந்த நடுநிலை.

இரும்பு கூரை மீது பொழியும் மழையின் சத்தத்தை விட இவர்கள் இருவரின் வாதமும் இடைவிடாது திசை எங்கிலும் ஒலி எழுப்பி கொண்டேயிருந்தது.

கொள்கைகள் காலம்தோறும் மாறிக்கொண்டே போகும் அதற்கு வளைந்து கொடுத்து பயணிப்பது தான் நடுநிலை தன்மை . கொள்கையை இறுக பற்றிக்கொண்டு காலமாற்றங்களை அறியாமல் இருப்பது தான் அடையாள விரும்பிகளின் துயரம்.நிலைபாட்டோ, அடையாளமோ என்பது ஒரு சுமை போன்றது ,அதை கொண்டு உங்களால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்று நீங்கள் நம்புகீர்கள் என்று அவசர படாமல் பொறுமையாக சொற்களை வெளியிட்டார் ஸ்ரீனி.

மனதில் வலிமை உள்ளவரை என்று வேகம் குறையாமல் சூலூரைத்தார் அன்புமணி.

பேச்சியில் மட்டும் வலிமை போதாது . நடைமுறை சாத்தியம் பேசுங்கள் . மனித குலத்தை பிரிக்க உருவாக்கப்பட்டதே இந்த அடையாளங்களின் வேர் என்று ஆணித்தனமாக  ஸ்ரீனி எதிர் வாதம் புரிந்தார்.

இல்லை என்று அன்புமணி சொல்ல ஆரம்பிக்கும் முன்னே ஸ்ரீனி தனது கருத்துக்களை தொடர்ந்து கொண்டு இருந்தார். நீ ஒரு இந்து, நீ ஒரு சத்ரியன் , நீ ஒரு தமிழன் என்று அடையாளப்படுத்தும் போது நீ பொதுமேடையில் தனித்து வைக்க படுகிறாய் என்பதை எப்பொழுது உணரப்போகறீர்கள்.

மிகவும் தவறான புரிதல் , அடையாளம் என்பது ஒருமித்த எண்ணம் உடையோர்கள் ஒன்று சேர்ந்து தங்களின் கருத்துக்கு எதிர்த்து வரும் ஆபத்துகளில் இருந்து தங்களை காப்பதே ஆகும்.  மனிதன் சிந்திக்கும் திறம் கொண்டமையால் வந்த வினையே இந்த அடையாளங்கள். மனிதன் இருக்கும் வரை அடையாளம் இருக்கும். இயற்கை பேரழிவு காலங்களில் அடையாளங்கள் கடந்து உதவுவதே சிறந்த மனிதம் ஆகும்.

கடைசியில் நீங்கள் சொல்லும் அந்த பேரழிவு காலங்கள் நம் உலக  வாழ்க்கையில் எப்பொழுதோ ஆரம்பம் ஆகி விட்டது. அதை உணர்த்தத்தினாலே நான் நடுநிலையில் இருக்கிறேன்.

கனமழை நீரை உள்வாங்க முடியாமல் தவிக்கும் வாய்க்கால் போல இரு நண்பர்களின் கருத்துகளை உள்வாங்க முடியாமல் தவித்து கொண்டுயிருந்தார் சாமிகண்ணு.

தான் எழுப்பிய ஐய வினாவில் இருந்து தானே இந்த சொற்போர் ஆரம்பித்தது அதை எப்படி தடுத்து நிறுத்துவதென்று பதறி கொண்டு இருந்தார் மகேஷ்.

அன்புமணி எண்ண ஓட்டம் அதிகரித்து
கொண்டே போனது, நம்பிக்கை அற்றவர்கள் தான் வாழ்வின் கடைசி நிமிடத்தை  பற்றி பேசுவார்கள் . வாழ வேண்டும் என்பவர்கள் வழிகள் அமைப்பார்கள். விரல்களுக்குள் உள்ள வேறுபாட்டை உணர்த்த உங்களால் மனித வேறுபாட்டை ஏற்க மனம் இல்லை. நடுநிலை பேணும் நீங்கள் பிடிமானம் இல்லா சறுக்கு பாதையில் ஏற முயல்கீரிர்கள்.

உங்களை போன்று இடது அல்லது வலது சாரிகள் உணர்ச்சியின் வழியே அணுக முற்படுகின்றீர். கண்முடி தனமாக எல்லா விடயங்களையும் நம்ப குடியவர்கள். உண்மையை தேட சிறிதும் யோசிப்பதில்லை. நாங்கள் அறிவின் வழியே அனைத்தையும் நோக்குவதால் எங்களுக்கு உண்மை நிலை புரிகிறது. எப்பொருள் யார்யார் வாய் என்ற திருக்குறளை என் மனதில் பதித்தவன் நான் என்று சொல்லி முடித்தார் ஸ்ரீனி.

மாந்தற்கு அழகு மனதின் வழியே சிந்திப்பது , அறிவு சுயநலத்தை சுற்றியே பயணிப்பது. மிருகங்களுக்கும் நமக்கும் உள்ள வேற்றுமை அறிவில் அல்ல மனதால் சிந்திப்பதில்லை. என்பும் உயிர் பிறருக்கு என முடியும் குறளை என் ஆழ்மனதில் புதைத்து உள்ளேன். அந்த விதையின் கிளைகளில் தான் நீங்கள் இப்பொழுது மோதி பார்த்து கொண்டு இருக்கிறீர்கள், வேரை காண இன்னும் என் ஆழம் பார்க்காதீர்கள், உங்களுக்கு அது நல்லது அல்ல என்ற எச்சரிக்கை ஓசை எழுப்பினார் அன்புமணி.

மழை சற்று அடங்க தொடங்கியதும். இவர்களின் பேச்சும் தடை உற்றது. தங்கள் வண்டிகளை எடுத்து வீடு சேர நண்பர்கள் நால்வரும் புறப்பட தயாராகினர். வீட்டுக்கு தாமதமாக சென்றால் இதை விட பெரிய சொற்போர் தங்களை தாக்கவிருக்கும் அதை உணர்ந்தே நண்பர்கள் விவாதத்தை ஒரு முடிவுக்கு வராமல் கிளம்பி சென்றனர்.

அப்பொழுது தேநீர் கோப்பையை எடுக்க தன் கைகளை நீட்டிய போது , கோப்பையின் மேல எறும்புகள் மேய கண்ட அன்புமணிக்கு பாரியின் நினைவு மின்னலென வெட்டியது..

கோப்பையை அங்கேயே ஒரு ஓரமாக கடைக்காரர் கண்களுக்கு தெரியாமல்  விட்டு சென்றார்.

பனிக்காலம்

முருகன் வள்ளி , நீலன் மைலா காதல் கதைகள் வரும் வேள்பாரி பகுதிகள் என் நெஞ்சுக்கு அருகில் இருப்பவை. அதை படித்தது முதல் அது போன்ற ஒரு கதை எழுத என் உள்ளூரியது. இன்று அதுவே ஒரு சிறிய ஊற்றாக மாறி எழுத்து வடிவு பெற்றுள்ளது.

ஒரு கார்த்திகை நாளன்று வீட்டின் திண்ணையில் அமர்ந்து மாலை பொழுதில் தனிமையை வெல்ல மாறன் முயன்று கொண்டிருந்தான். குளிர் காற்று வீச உமையாள் மாறனின் குடிசை வந்தடைந்தாள். இருவரும் அவனது குடிசையில் அகம் மகிழ்ந்து பேசி கொண்டிருந்தனர். 

காலத்தை விழுங்கும் ஆற்றல் நம் மனதுக்கு அணுக்கம் நிறைத்தவரிடம் கதைக்கும் நேரங்களில் நம்மால் உணர முடியும். பசியறியா, பொழுதறியா அவர்களின் உரையாடல் நீட்சி கொண்டே இருந்தது.

எதிர்பாரா வண்ணம் மின்சாரம் தடையுற்று திசை எல்லாம் இருளில் மூழ்கி கிடந்தது. இருளின் கோரம் உமையாளின் ஆழ் மனதில் இறங்கி கொண்டிருக்கும் வேளையில், தெரு நாய்களின் ஊளை சத்தம் உமையாள் நெஞ்சை நடுங்க செய்தது .காதலை முந்தி கொண்டு பயம் உமையாளை முன் நகர்த்தியது.  அனிச்சையாக அவளது கரங்கள் மாறனின் கைகளை பற்றியது. 

அவளது உடல் சூட்டை அவனது குளிர்ந்த தேகம் கடப்பதை மாறன் உணர தொடங்கினான். எல்லா குளிருக்கும் தான் தேடும் சூடு இவள் தானென்று மனம் துள்ள தொடங்கியது. அவளது கைகளை மெல்ல பற்றி ஆறுதல் கூறி பின் மெழுகுவர்த்தி ஏற்ற தீக்குச்சியை பற்றினான். 

திரியில் நெருப்பு பற்றியவுடன் உருக தொடங்கியது மெழுகல்ல மாறனின் நெஞ்சம். ஒற்றை தீக்குச்சி பெரும் காட்டை விழுங்க வல்லது என்பதை மாறன் அப்பொழுது தான் உணர்ந்தான்.வீசும் ஒளியில் உமையாளின் பொன்தேகம் மேலும் மிளிர செய்தது. இந்த இருள் மாறனுக்கு புது பாதையை காட்டி கொண்டிருந்தது. உமையாளை முதல் முதல் பார்த்த கணம் மாறனின் நெஞ்சினுள் பரவதொடங்கியது.

அன்று, வழக்கம் போல் ஆற்றங்கரையோரம்  உள்ள ஆலமர விழுதுகளை பிடித்து ஊஞ்சல் போல் தொங்கி கொண்டிருந்தான் மாறன். ஆற்றுக்குள்ளிருந்து ஒரு பதுமை வெளி வர கண்டு உறைந்து நின்றது மாறனின் கண்கள். ஆற்று நீர் ஒளி மின்னுவது இவளது தேகம் உதிர்க்கும் ஒளியினாலா கதிரவன் ஒளியினாலா என்ற வியப்புகள் மாறனின் உள்ளத்தே ஊடுருவி கொண்டிருந்தது.

 வழிந்தோடும் கூந்தலை கண்டு ஆற்றை தன் கூந்தலோடு கடத்தி வந்தாலா என்று கேள்வி இடைவிடாது மாறனின் நெஞ்சை தட்டியது. உயர பறக்கும் பருந்து போல மாறனின் பார்வை அவளின் மீன் கண்களை கவ்வ முயன்று கொண்டு இருந்தது. சிறு வயதிலிருந்து விழுதுகளை  இறுக பிடித்து விளையாடிய மாறனின் கைகள் அன்று நழுவ தொடங்கியது. காதலேனும் ஆற்றில்  முழுமுற்றாக  மாறன் மூழ்கினான்.

ஆற்றியில் இருந்து அவளை பின்தொடர்ந்து சென்ற மாறன், கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை இடைமறித்து நின்றான்.

மனதின் இடையூறுகளை கணநேரத்தில் வென்று வாய் திறந்து அவளிடம் பேச ஆயத்தமானான். உங்களை இந்த ஊரில் பார்த்ததில்லையே! நீங்கள் யார், உங்கள் பெயர், தனியாக எப்படி இந்த ஆற்றங்கரைக்கு என்று தன் உள்ள தடுமாற்றலை கேள்விளாக அடுக்கி கொண்டு போனான்.

அவளோ நிதானமாக தன் கூரிய கண்களால் மாறனை கண்களின் வழியே ஊடுருவ பேச தொடங்கினாள். ஊர் காவல் வீரருக்கு , காட்டு விலங்குகள் பற்றி மட்டும் அறிந்தவராக இல்லாமல் ஊரில் உள்ளவர்களை பற்றியும் கொஞ்சமேனும் தெரிந்து வைத்திருத்தல் மிக அவசியமான ஒன்று என்று மென்மையாக மொழிந்தாள்.

 காட்டு விலங்குகள் ஊருக்குள் புகாதவாறு இராக்காவல் புரியும் ஊர் காவல் படையில் தன்னார்வ உணர்வோடு தொண்டு செய்பவன் மாறன். 

தான் சற்றும் எதிர்பாராததாக இருந்தது அவளின் பதில். தன்னை பற்றி அவளின் கூற்று மாறனை வியப்பின் பேராழத்தில் தள்ளியது. அவளை கண்டு சருகிய மனம் அவளின் மொழியை கேட்டு மேலும் சரிந்தது. பேச வார்த்தைகளை தேடி எண்ணங்கள் அலைந்தோடின. கிடைத்த வார்த்தைகளும் தொண்டை குழியில் சிக்கி வெளி வர மறுத்தன. 

விலங்குகள் ஏற்படுத்தும் காயங்களுக்கு மருத்துவச்சி வீட்டுக்கு வரும் தாங்கள் அங்கு நோட்டம் விட்டிருந்தால் இத்தனை கேள்விகளும் தடுமாற்றங்களும் வந்திருக்காது அல்லவா என்று புன்முறுவல் பூத்தாள்.

திகைப்பில் இருந்து மீளாத மாறன் சிந்தனையை மருத்துவச்சி வீட்டினுள் ஒருமை படுத்தினான். மாறன் நினைவுக்கு வந்தது கொலுசுகள் ஏந்தி நடக்கும் வழுவழுப்பான கால்கள் மட்டும் தான். 

மாறனின் எண்ண ஓட்டங்களை தகர்க்கும் விதமாக அவள் முணுமுணுக்க ஆரம்பித்தாள். மண்ணையே உங்கள் கண்கள் பார்த்து கொண்டிருந்தால் என்று வானை அடையாளம் கொள்ள போகிறீர்கள் என்று அவள் வினவினாள்.

அந்த கால்களுக்கு உரிமை கொண்டவள் இவளென்று புரிந்து கொண்டான். தான் அவளின் கால்களை  நோக்கியதை அவளும் அனுமதித்து இருக்கிறாள் என்பதை உணர்ந்த கணம் சிறகுகள் இன்றி காற்றில் மிதக்க எத்தனித்தான்.

அவளின் மஞ்சள் பூசிய முகத்தில் விரிந்த நுதலில் இரு புருவத்திற்கிடையே இட்ட சிவந்த பொட்டு காலை கதிரவனை நினைவூட்ட, தண்ணீர் வடிய கொண்டிருக்கும் கூந்தல் மாரியை கொண்ட கருமேகத்தை ஒத்து இருந்த வானின் அடையாளங்களை கண்டு மயங்குநிலை கொண்டான்.

நீ காவல் படையில் பணிபுரிய தகுதியற்றவன் என்று மூர்க்கத்தோடு கூறினாள். மாறனை மண்டையில் அரைந்ததாக இருந்தது அவளின் கூற்று. மயங்கு நிலையில் இருந்து மீண்டு நிலைக்கொள்ள தடுமாறினான்.

ஏன் என்று வினவும் முன்னே, அவளே தன் நியாயத்தை சூல் உரைத்தால். காவல் வீரனான உனக்கு  என் கண்கள் உன் சரீரத்தை ஊடுருவ முயன்றதை உள்ளுணர்வால் ஒரு சந்தர்ப்பத்திலும் உன்னால் உணரமுடியவில்லை.  நறுமணம் ஏந்திய என் தேகங்கள் கடக்கும் போது அது உணராது உன் நுகர்வும், நான் குறிப்பு ஒலி எழுப்பிய நேரங்களிலும், உமையாள் என்று என் அன்னை கூப்பிடும் போதும் உன் செவிகள் மறுத்து இருந்தது தான் காரணிகள் என்று போட்டு உடைத்து  சன்னமாக புன்னகைத்தாள். இப்பொழுது சிறகின்றி முழுவதுமாக காற்றில் பறக்க ஆரம்பித்தான்.

அன்று நழுவிய கைகள் இன்று உமையாளின் கைகளை இறுக பற்றியது. அன்று நீரின் குளுமையும்  இன்று நெருப்பின் கதகதப்பும் என அவளினுள்  இருக்கும் மாய வித்தையை மாறன் ரசித்து சஞ்சரித்து கொண்டிருந்தான். 

அன்று கண்ட அவளின் தேக ஒளி சிதறல் இன்றும் காண நேரும் போது மாறனின் மனமும் சிதறக் கண்டது. மாறன் கைகள் பற்றிய கனமே உமையாள் தன்னை இழக்க ஆரம்பித்தாள். இருளின் பிடியில் இரவு இருப்பதை போல ஒருவரின் பிடியில் மற்றொவர் இருந்து யாமத்தை கடந்து சென்றனர். இரு நிழல்கள் ஒரு நிழலாகி இரவு முழுவதும் இருவரின் தேகங்களும் ஈரம் கசியவிட்டு கொண்டேயிருந்தது. குடிசைக்கு வெளியே வானும் இரவெல்லாம் பனியை கசியவிட்டு கொண்டே இருந்தது...