"உனக்கேன் இந்த அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள், நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக
பாதிக்கப்பட்டேன். சுயநலம் என்பீர், அதில் பொதுநலமும் கலந்து இருக்கிறது" என்ற பராசக்தி திரைப்பட வசனம் என்றும் நம் நெஞ்சில் நீங்கா நினைவில் இருப்பவை.
உதாரணமாக மகாத்மா காந்தி தென்னாபிரிக்கவில் மேற்படிப்பு பயில்கையில் நிற வேற்றுமை காரணமாக பல இன்னல்களுக்கு ஆளானார். அதுவே அவர் பிற்காலத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட உந்துதலாக இருந்தது. பின்னாட்களில் அவர் நாம் தாய் திருநாட்டின் தந்தையாக கொண்டாட பெற்றார்.
பகுத்தறிவு பகலவன் என்று போற்றப்படும் தந்தை பெரியாரும் ஒரு சமயம் காசியில் பசி வேதனையில் அலையும் நேரத்தில் ஒரு சத்திரத்தில் சாப்பிட எண்ணி உள்ள செல்ல முற்பட்டபோது அவரின் சாதிய வேற்றிமையின் காரணமாக அவருக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னரே சாதி கொடுமையை எதிர்த்து பெரிதும் போரிட்டார்.
இன்னும் ஒருவரின் கதை மீதமுள்ளது. இவரும் ஒரு சுதந்திர போராட்ட வீரர். மிகவும் பொருளாதார வசதி கொண்ட குடும்பத்தில் பிறந்து, சிறப்பு கல்விகளை மேற்கொண்டு, தன் தந்தை போலொரு வழக்கறிஞராக பணியாற்றி, அதிலொரு நிலையான புகழும் பெற்று, பாலகங்காதர திலக் அவரின் நாட்டு விடுதலை மற்றும் சுதேசி இயக்கங்களின் தாக்கங்களால் சுதந்திர வேள்வியில் தன்னை தாண்டவமிட்டு, இறுதி காலம் வரை தாய் நாட்டின் விடுதலையை தன் மூச்சாக கொண்டு வாழ்ந்த தன்னலமற்ற தியாக செம்மல் வ உ சிதம்பரம் பிள்ளை அவள்கள் மேற் கூறிய புகழ் மிக்க வசனதிற்க்கு விதி விலக்காய் வாழ்ந்தவர். ஆம் அவரின் வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வின் பாதிப்போ அவரை பொது வாழ்க்கைக்கு அழைத்து வரவில்லை. தன் சுயசிந்தனை மற்றும் மனசாட்சி வழியே அவர் தன் தாய்மண்ணுக்கும் தன் சுற்றத்தாருக்கும் நடக்கும் அநீதிகளை கண்டு வெகுண்டு எழுந்தார்.
சுயநலமென்னும் விதையில் இருந்து வந்த விருச்சங்கள் போலல்லாமல் மண்ணில் விதைக்கப்படும் போதே அவர் பொது உடமையாக விதைக்கப்பட்டார்.
மக்களுக்கு துயரம் வரும் சமயங்களில் எல்லாம் தன்னையே தியாகம் செய்தமையால் வரலாற்று பதிவுகளில் அதிகம் இல்லாமல் போக காரணமானார்.
வைரத்தை வைரத்தை கொண்டு தீட்டுவது போல வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்களை அந்த வணிகம் மூலமே வீழ்த்த ஆயத்தமாகி கப்பலோட்டிய தமிழன் என்ற வான் கீர்த்தியும் பெற்றார்.
காரணமேயின்றி வரும் காதலே நிலைத்து இருக்கும் என்பது பொன்வாக்கு. ஐயா அவர்கள் மண் மீது வைத்த காதலும் அவ்வாறு என்றும் நிலைத்த ஒன்று. தன் இறுதி நாட்களில் தன் நண்பராகிய பாரதியாரின் தேச விடுதலை பாட்டை கேட்டு கொண்டே அவரின் உயிர் பிரிந்தது.
இத்தகைய நெஞ்சுரம் கொண்டவரின் பிறந்தநாளான இன்று (5 செப்டம்பர்) அவரின் தியாகத்தை மனதில் கொண்டு வணங்குகிறேன்.
வாழ்க! வ உ சி ஐயா அவர்களின் புகழ்.